புதன், 22 ஜூலை, 2020

17th Sunday in Ordinary Times A, 2020, ஆண்டின் பொதுக்காலம் பதினேழாம் வாரம் மறையுரை சிந்தனைகள்:





ஆண்டின் பொதுக்காலம் பதினேழாம் வாரம் மறையுரை சிந்தனைகள்: 

இறையரசு, விண்ணரசு 
(கடந்த வாரம் முன்னுரையில் எழுதப்பட்டது)

மத்தேயு இதனை விண்ணகங்களின் அரசு (ἡ βασιλεία τῶν οὐρανῶν ஹே பசிலெய்யா டோன் ஹூரானோன்) என அழைக்க, மற்யை நற்செய்தியாளர்கள் இதனை இறைவனின் அரசு (ἡ βασιλεία τοῦ θεοῦ ஹே பசிலெய்யா டூ தியூ) என அழைக்கிறார்கள். முதல் ஏற்பாட்டிலும் சரி, புதிய ஏற்பாட்டிலும் சரி, இந்த விண்ணரசு என்ற சிந்தனை, மிக முக்கியமான ஒன்றாக இருக்கிறது. விவிலிய ஆசிரியர்கள் இதனை, கடவுளின் ஆட்சிக்கு உட்பட்ட பகுதி என நினைக்கிறார்கள். இயேசுவை நற்செய்தியாளர்கள் இறைவனின் வாரிசு எனக் காட்டுவதால் அவர்தான் இறையரசின் வாரிசு எனவும் காட்டவேண்டிய தேவை முக்கியமாக இருக்கிறது.

 முதல் ஏற்பாட்டில் இறையரசு: 

முதல் ஏற்பாட்டில் ஒரே கடவுள் நம்பிக்கையை, பல கடவுள் நம்பிக்கை சதாரணமாக இருந்த சூழலில் தக்க வைக்க, மிகவே போராடினார்கள். இஸ்ராயேலை சுற்றியிருந்த மக்கள் தங்கள் அரசர்களின் ஆட்சி வானத்திலிருக்கும் தங்கள் தெய்வங்களின் அடையாளம் என கருதினார்கள். வானத்தில் நல்ல தெய்வங்கள், தீய தெய்வங்களை வென்று நல்லாட்சிகளை நடத்துகிறார்கள் அதன் வெளிப்பாடுதான் மண்ணக அரசு என நம்பினார்கள். இந்த தெய்வங்கள்தான் மண்ணகத்தை உருவாக்கினார்கள் அத்தோடு அவர்கள் ஒவ்வொரு வருடமும் மண்ணகத்தை வளப்படுத்துகிறார்கள் எனவும் நம்பினார்கள். இதால், மண்ணகத்தில் இராணுவங்கள் சண்டைபோடுகின்ற போது அவர்கள் தங்கள் அரசர்களுக்காக மட்டுமல்ல, மாறாக வானகத்திலுள்ள தங்கள் தெய்வங்களுக்காகவும் போராடுகிறார்கள் என இவர்கள் நம்பினார்கள். மண்ணக வெற்றியோ அல்லது தோல்வியோ, அந்தந்த தெய்வங்களின் தோல்விகள் அல்லது வெற்றிகள் என கருதப்பட்டன.
  எபிரேயர்களுடைய இறையரசு (மல்கோத் அதோனாய்) என்ற சிந்தனை கானானிய மற்றும் மொசப்தேமிய சிந்தனைகளை உள்வாங்கியிருக்கிறது என்பதை மறுக்க முடியாது. ஆனால் இவர்களுடைய சிந்தனை வியக்கத்தக்க வகையில் மிகவும் இறையியல் ஆழமுள்ளதாக இருக்கிறது. தங்களுக்கு வாக்களிக்கப்பட்ட கானான் நாடு, அவர்கள் கடவுளின் வல்லமையின் அடையாளம் என்பதையும், அதனைக் கொடுக்க அவர் பொய்த் தெய்வங்களை இல்லாமல் ஆக்கினார் என்றும் நம்பினர். இது மற்றயவர்களுடைய நம்பிக்கையிலும் சற்று வித்தியாசப்படுகிறது. அதாவது இஸ்ராயேலின் கடவுள் பூமியை உருவாக்கினவர் மட்டுமல்ல மாறாக அவர்தான் அனைத்தையும் தீர்மானிக்கறவர் என்பதையும் இது காட்டுகிறது. கடவுள் முழு உலகத்தையும் படைத்தார் எனினும், ஆபிரகாம் என்ற ஒரு தனி மனிதர் தன்னுடைய விசுவாச கீழ்படிதலால் ஆண்டவருடைய ஆசீர்வாதத்தையும் கானான் நாட்டையும் பெற்றுக்கொன்டார் என்பதும் பழைய ஏற்பாட்டின் நம்பிக்கை. இதே வேளை இஸ்ராயேலின் கடவுளின் ஆட்சி கானான் நாட்டிற்கு மட்டும் உட்பட்டதல்ல, மாறாக அது வடக்கு கிழக்கு, தெற்கு, மேற்கு, என அனைத்து உலகையும் ஆட்கொள்கிறது என்பதையும் அவர்கள் நம்பினார். இந்த சிந்தனை திருப்பாடல் ஆசிரியரால் மீண்டும் மீண்டும் சொல்லப்படும். விடுதலைப் பயணம் என்ற அனுபவும் இந்த இறையாட்சியுடன் ஒப்பிட்டு நேக்கப்பட வேண்டும். பாரவோன் என்கின்ற மனித மன்னன், அல்லது அவனது தெய்வங்கள், இஸ்ராயேலின் கடவுளால் தோற்றகடிக்கப்பட்டன. இதனால்தான் அவர் இஸ்ராயேல் மக்களை வெளியே கொணர்ந்து, செங்கடலை கடக்க வைத்து, உடன்படிக்கை செய்த வாக்களிக்கப்பட்ட நாட்டில் குடியமர்த்துகிறார்.  இஸ்ராயேலரின் இந்த தனிப்பட்ட இறையியல், சவுல் மற்றும் தாவீது போன்ற அரச வம்சங்களின் வருகையுடன், சற்று மாற்றமடைகிறது. சாதரணமாக இஸ்ராயேல் மக்கள் தங்களுக்கு கடவுளைத்தான் அரசராக ஏற்றுக்கொண்டார்கள். இதனால் அதிகமான விவிலிய ஆசிரியர்கள் சவுலையும், தாவீதையும் அரசர்களாக ஏற்றுக்கொள்வதில் அல்லது அவர்களை விவரிப்பததில் வித்தியாசம் காட்டுகிறார்கள். இந்த மனித அரசர்களின் தோற்றம் ஆபத்தானது, பிழையானது மற்றும் தேவையில்லாதது என்பதையும் காட்டுகின்றனர் (காண்க 2சாமுவேல் 7: 1அரசர் 9). இந்த சிந்தனையும் மெது மெதுவாக மாற்றம் பெறுகிறது. சில புத்தகங்கள் தாவீதை கடவுளுடைய பணியாளர் அல்லது மகனாக காட்டி உண்மையான அரசர் கடவுள் எனவும் காட்டுகின்றனர்.

ஏற்பாட்டிற்கு இடைப்பட்ட காலத்தில் இறையரசு:

 அரசர்களின் தோல்வியும், அடிமை வாழ்வும், பபிலோனிய நாடுகடத்தலும், இஸ்ராயேலர்களின்
இறையியலில் மிக ஆழமான பாதிப்பை ஏற்படுத்தின. ஆண்டவர் தாவீதிற்கு, அவரின் அரசும் வாரிசும் அழிந்து போகாது என்று வாக்களித்திருந்தார். இப்படியிருக்க எப்படி அவர் சந்ததி அழியலாம்? என்ற கேள்வி பலமாக விவாதிக்கப்பட்டது. தாவீதின் நிலையான அரச வம்சம்தான் கடவுளின் அழிக்க முடியாத அதிகாரத்தின் அடையாளமாக பார்க்கப்பட்டபடியால், இந்த இழப்புக்கள் கடவுளின் வார்த்தையையே கேள்வியாக்கிறதோ, என்றும் எண்ணினார்கள். இந்த காலத்தில் தோன்றிய ஆசிரியர்கள் மற்றும் அவர்களின் புத்தகங்கள், கடவுளுடைய அரசோ அல்லது ஆட்சியோ மண்ணக அரசர்கள் மற்றும் நிலங்களில் தங்கியிருப்பதில்லை. மாறாக அது மண்ணக அரசர்கள் மற்றும் நாடுகளையும் தாண்டியது என்கிறார்கள். இஸ்ராயேலின், கடவுளின் ஆட்சி என்பதை இவர்கள் முனணிருத்துகிறார்கள்.
தாவீதுடைய வம்சாவளியின் தோல்வியோ, இடப்பெயர்வோ இஸ்ராயேல் கடவுளை
ஒன்றும் செய்ய முடியாது, மாறாக அவர்தான் இந்த தண்டனைகளை அனுமதித்திருக்கிறார் என்ற புதிய செய்தியை அவர்கள் முன்வைத்தார்கள். ஒரு அரசரோ அல்லது அரசாட்சியோ நிலைக்க வேண்டும் என்றால், அவர்கள் கடவுளின் வார்த்தையை கேட்டு அதற்கு ஏற்ப வாழ வேண்டும், இல்லாவிடில் அழிவார்கள, என்பதையும் அனுபவத்தைக் கொண்டு விளக்கப்பட்டது.
  இந்த காலத்தில்தான் இறுதிக்கால சிந்தனைகள் முதன் முதலாக இஸ்ராயேலருக்கு வழக்கில் வந்தன. அதாவது இறுதிக்காலத்தில் இஸ்ராயேலின் அரசர் முழு உலகையும் தனதாக்கப்போகிறார், அது கடவுளின் நாள் எனப்படும், அந்நாளில் அனைத்து நாடுகளுக்கும் அவர் தீர்ப்பளிப்பார் என்ற சிந்தனையும் வருகிறது. பின்னர் அவர் யூதேயாவையும், தாவீதின் அரசாட்சியையும் என்றென்றைக்கும் நிலைநிறுத்தப் போகிறார் என்ற சிந்தனையும் உருவாகின. இந்த சிந்தனையுன் மெசியாவின் வருகையும் உருவானது. இந்த மெசியா, அபிசேகம் செய்யப்பட்டவர் அவர்தான் கடவுளின் அரசை நிறுவப்போகிறவர் என்று ஆழமாக நம்பப்பட்டது. கடவுளின் எதிரிகள்தான் யூதேயாவின் அல்லது இஸ்ராயேலின் எதிரிகள் என்றும் அவர்களுக்கு இந்த மெசியா தண்டனை அளிப்பார் என்றும் காத்திருக்க தொடங்கினர்.
  இறையரசுதான் மெசியாவின் அரசு அதனை அவர் கானானில் தொடங்குவார், அங்கு அடாத்தாக குடியிருப்பவர்களை அவர் விரட்டுவார், அவர்களுக்கு கடுமையான தண்டனை கிடைக்கும் என்பதையும் இக்கால புத்தகங்கள் காட்டுகின்றன.

 புதிய ஏற்பாட்டு காலத்தில் இறையரசு: 

இஸ்ராயேலருடைய இறையரசு பற்றிய சிந்தனைக்கு, இஸ்ராயேலில் உரோமையரின் ஆட்சி மிகவும்
இடைஞ்சலாக இருந்தது. இதனை எதிர்க்கவே மக்கபேயர் பல யுத்தங்களைச் செய்தனர். மக்கபேயருடைய சண்டைகள் முதலில் கிரேக்கர்களுக்கு எதிராக இருந்து பின்னர் உரோமையர்களுக்கு எதிராகவும் இருந்தது. சந்தர்ப்பத்தை சாதகமாக பாவித்த எரோதியர் குடும்பம், உரோமையரின் உதவியுடன் ஆட்சியைக் கைப்பற்றி, சீசரை ஏற்றுக்கொண்டு அரசாள தொடங்கினர். எரோது தாவீதின் வழிமரபில் வராத முழுமையில்லாத ஒரு யூதன். இந்த நிகழ்வுகளும் யூதர்களின் இறையரசு மற்றும் கடவுளின் அதிகாரம் என்பதில் பல கேள்விகளை எழுப்பின. இந்த நிகழ்வுகள் ஆண்டவருடைய நாள் மற்றும் இறுதி தண்டனை என்ற சிந்தனையை வேகப்படுத்தின. இயேசு ஆண்டவர் பணிவாழ்வை தொடங்கிய காலத்தில், இறுதி நாள் பற்றிய சிந்தனைகள் ஏற்கனவே உச்சத்தை அடைந்திருந்தன. சீசருடைய ஆதிக்கம் பாலஸ்தீனாவை மட்டுமல்ல அதிகமான மத்திய கிழக்கு பிரதேசங்களை ஆட்கொள்ள முயன்ற வேளை, பல உரோமைய மாகாணங்கள் சீசரை அரசியல் தலைவர் என்பதையும் தாண்டி கடவுளாக பார்க்க முயன்றனர். இது இஸ்ராயேலருக்கு பெரிய சவால். கடவுளால் மட்டும்தான் இந்த உரோமைய ஆதிக்கத்தில் இருந்து வாக்களிக்கப்பட்ட நாட்டையும், கடவுளின் சொந்த மக்களையும் காக்க முடியும் என்ற சிந்தனை வளர்ந்தது.
இப்படியான காலப்பகுதியில்தான் திருமுழுக்கு யோவான் வந்து இறையரசு வந்துவிட்டது மற்றும் மெசியா வந்துகொண்டிருக்கிறார் என்று முழங்கினார். இது யூதர்களின் இதயங்களை கவர்ந்தது, புருவங்களை உயர்த்தியது. உடனடியாக இயேசு பொதுவில் தோன்றி நேரம் வந்துவிட்டது, இறையரசு ஏற்கனவே தொடங்கிவிட்டது என்று போதிக்க தொடங்கினார். இயேசுவின் போதனைகளில் இறையரசு மத்திய செய்தியாக அமைந்தது. அனைத்து செய்திகளும் இந்த மையச் செய்தியை சுற்றியே அமைக்கப்பட்டன. இதன் காரணமாக இயேசு அனைவரினதும் அவதானங்களை ஈர்த்தார். இந்த இறையரசை அமைப்பது மெசியாவின் கடமை மட்டுமல்ல அனைவரினதும் என்று சொல்லி விசுவாசத்தில் கீழ்ப்படிவை எதிர்பார்த்தார். இயேசுவுடைய போதனையுடன் இறையரசு என்பது முழுமையான ஒரு ஆன்மீக அரசு என்ற அடையாளத்தை பெறுகிறது. இதனை சில ஆய்வாளர்கள் எதிர்கிறார்கள் சிலர் ஆதரிக்கிறார்கள். யூதர்களுடையதும் கிறிஸ்தவர்களுடையதும் இறையரசு சிந்தனை இந்த இடத்துடன் இரண்டு விதமான பாதைகளில் செல்லத் தொடங்குகின்றது.இயேசுவுடைய அநேகமான உவமைகள் இறையரசை தன் மக்களுக்கு புரிய வைப்பதற்கான முயற்ச்சிதான். இந்த உவமைகள் சாதாரண எளியவர்களின் நாளாந்த கதைகளாக இருந்த படியால் அதிகமானவர்களால் இலகுவாக புரியப்பட்டன. ஆண்டவருடைய உயிர்ப்பிற்குப் பின்னர், அவருடைய இரண்டாம் வருகைதான் இறையரசின் நிறைவு என எதிர்பார்க்கப்பட்டது. ஆண்டவருடைய இரண்டாம் வருகை காலம் தாழ்த்தவும், அதனை பற்றி சரியான நேரக்கணிப்புக்களை கொடுக்க முடியாமல் போகவும், புதிய ஏற்பாட்டு ஆசிரியர்கள் அதனை கணிக்க முடியாது என்கின்றனர்.
  முடிவாக, இறையரசு என்கின்ற சிந்தனை இன்றுவரை விவிலிய ஆய்வாளர்களின் தூக்கத்தை கலைக்கும் முக்கியமான சிந்தனையாக இருக்கிறது. இருப்பினும் இயேசுவுடைய பிறப்பின்போதே இறையரசு ஏற்கனவே முழுமையாக நிறைவேறிவிட்டது என்று சில கிறிஸ்தவ ஆய்வாளர்கள் நம்புகின்றனர். இப்பபோதைய தேவை, தனிப்பட்டவர்களின் மீட்பு மட்டுமே என்றும் வாதிடுகின்றனர்.

அ. புதையல்:
நிலத்திற்கு கீழுள்ள அனைத்தும் அரசிற்கு சொந்தம் என்பது ஒரு சட்டம். இதனால் நிலத்திற்கு கீழுள்ள புதையல்களும் அரசிற்கு சொந்தம். இந்த காலத்தில் அரசுகள் மக்களுக்கு சொந்தம் என்பதால் புதையல்கள் மக்களுடைய சொத்தாக மாறும் என்ற ஒரு நம்பிக்கை. பல வளர்ந்த நாடுகளில் இது சாத்தியம். பல அதிகமான ஆசிய மற்றும் அதிகமான ஆபிரிக்க நாடுகளில் அரசருடைய அரசானாலும் சரி, மக்களுடைய அரசானாலும் அவர்கள் புதையல்களை தங்கள் பரம்பரைக்குத்தான் சேர்த்துக்கொள்வார்கள்.
இயேசுவுடைய காலத்தில் புதையல்கள் காரணத்தால், பல வன்முறைகளும், போர்களும் நடைபெறும். இதன் காரணமாக புதையல் ஒரு புறத்தில் புதையல் பெறுமதியாக இருந்தாலும், இன்னொரு புறத்தில் இது ஆபத்தாக அமைகிறது. புதையலை கண்டுபிடிப்பது மட்டுமல்ல, அதனை பாதுகாக்கவும், உரிமையாக்கவும் தெரிந்திருக்க வேண்டும். அப்போதுதான் அவர் புத்திசாலி. இறையரசும் அப்படித்தான், அதனை கவனமாக கையாளாவிட்டால், வேறு எவராவது கொண்டுபோய்விடுவார்கள். சிந்தனையில் இருக்கும் அல்லது படத்தில் இருக்கும் புதையலால் என்ன பயன்? அதனைப் போலவே விண்ணரசும். அது வீட்டிற்குள் கொண்டுவரப்படவேண்டும். கட்டுரைகளிலும், சிந்தனையிலும் மட்டுமே இருக்கும் விண்ணரசு சிந்தனைகளால் என்ன பயன்?

ஆ. முத்து:
முத்து ஒவ்வொன்றும் ஒவ்வொரு விலை. விலையுயர்ந்த முத்தை கண்டுபிடிக்கிறவர் அதனை பயன்படுத்தவும் தெரிந்திருக்கிறார். சிலர் முத்தை கௌரவத்திற்காக வைத்திருக்க விரும்புகிறார்கள். முத்துக்கள் சொத்துக்கள். வெறுமனே முத்தை அழகிற்காக வைத்திருந்து என்ன பயன்? முத்துக்களை சேர்த்து வைத்திருந்து பல தலைமுறைக்கு ஏழைகளாகவே இருக்கலாம். ஆனால் முத்தை பயன்படுத்தி தன் ஏழ்மையை தாண்டுகிறவர்தான் உண்மையான அறிவாளி.

இ. வலை:
வலைகளின் அமைப்புகள், இயல்புகள், போன்றவற்றைக்கொண்டு, அவற்றின் தகமைகள் வெளிப்படுகின்றன. எல்லா வலைகளிலும் எல்லா மீன்களையும் பிடிக்க முடியாது. உயர்தரமான வலையில்தான் உயர்தரமான மீன்கள் பிடிபடுகின்றன. சில வேளைகளில் சாதாரண வலைகளில் கூட பெறுமதியான மீன்கள் படிபடுவதுண்டு. பெறுமதியான வலைகளைக் கொண்டு பெறுமதியான மீன்களைக் பிடிக்கமுடியவில்லை என்றால், வலைகளால் என்ன பயன். வலைகள் அல்ல, மீன்களே எதிர்காலத்தை தீர்மானிக்கின்றன எனலாம். இருந்தாலும் வலைகளின் தகமைகள் மிக முக்கியம்தான். இறையரசு என்கின்ற வலை பாதுகாக்கப்படவேண்டும், நல்ல மீன்களும் பிடிபட வேண்டும்.

விண்ணரசு ஒரு தேடல், 
தொடங்கிவிட்டது, ஆனால் நிறைவுபெறவில்லை.
ஒவ்வொரு விசுவாசியும் விண்ணரசின் பங்காளியாகலாம். 
இயேசுதான் இந்த விண்ணரசு தரும் புதையலும், முத்தும். 
உலக புதையலும், முத்தும் அரசாங்கத்துடையது. 
பல அரசுகள் அதனைத் தேடி நாடுகளைக் சுரண்டி கொள்ளையடிக்கிறார்கள். 
ஆனால் இயேசு என்கின்ற இந்த புதையலும் முத்தும், 
யாராலும் கொள்ளையடிக்கப்பட முடியாதது. 
விலைமதிப்பற்றது. 
விற்க முடியாதது, ஆனால் 
வாங்க முடியுமானது. 


ஆண்டவரே உம்மை பற்றிக் கொள்ள வரம் தாரும், ஆமென்

வெள்ளி, 10 ஜூலை, 2020

ஆண்டின் பொதுக்காலம் 15ம் வாரம், அ. 
12.07.2020
விதைப்பவர் உவமை: மத்தேயு 13,1-23

நம் ஆண்டவர் இயேசு இஸ்ராயேல் மக்களுக்கு நன்கு தெரிந்த உவமைகள் நிகழ்வுகள் வாயிலாக அழகாக பேசும் தலைசிறந்த ஆசிரியர். இன்றைய நற்செய்தியில் அவர் நிலத்தின் விதைக்கப்படும் விதைகளை உருவகமாக எடுக்கிறார். இயேசு இந்த உவமையை சொல்ல தெரிந்தெடுக்கின்ற இடம் கலிலேயக் கடற்கரை. இது கடல் என்பதைவிட இதனை ஒரு ஏரியாகத்தான் எடுக்க வேண்டும். இந்த பகுதியில் இருந்த அதிகமான மக்கள் அந்த ஏரிக்கரையை சார்ந்த மீனவர்கள் எனவும் எடுக்கலாம். இருந்தாலும் அவர் விதைகளைப் பற்றியும் நிலத்தைப் பற்றியும் நன்கு பேசுகின்ற போது, அவர்களுக்கும் அது நன்கு புரிந்துவிடுகிறது. இதிலிருந்து செய்யும் தொழில் ஒருவருடைய முழுமையான அடையாளம் அல்ல மாறாக அது வெறும் தொழில்தான். தொழில் நம் அடையாளத்தை தீர்மானிக்காது, நாம் தான் தொழிலையும் அதன் அடையாளத்தையும் தீர்மாணிக்க வேண்டும். தொழிலை மையமாகக் கொண்டு வர்க்கப்பாகுபாடு காட்டி அதற்கு பல வரலாற்று அடையாளங்களைக் கொடுக்க முயலும் மதிகெட்டவர்களை எவ்வளவு காலத்திற்குத்தான் சகித்துக்கொள்ள முடியும். பாவம் அவர்களும் இந்த உலகமும். 

அ. விதைப்பவர் ஒருவர்தான் அவர் விதைப்பதும் நல்ல விதைகளைத்தான்: 
கடவுள் ஒருவர், அவர் படைக்கும் அனைவரும் இயற்கையாக நல்லவர்கள்தான். அவர்களில் எந்த பாகுபாடும் கிடையாது. விதைகளில் வித்தியாசம் இல்லை. வளரக்கூடிய நிலையையும், தன்மையையும் விதைகள் கொண்டிருக்கின்றன. கடவுளும் அப்படியே. கடவுள் தன் பிள்ளைகளை உயர்ந்தவர்கள் தாழ்ந்தவர்கள் என்று படைத்தால், அவரும் நிறைவில்லாதவர்தான். நம் கடவுள் அப்படியிருக்க முடியாது. நாம் கடவுளை பாகுபாடு காட்டுகிறவராக கண்டால் அந்த கடவுள் உண்மையான கடவுள் அல்ல, அந்த கடவுள் நமக்கு வேண்டாம். 

ஆ. அவர் விதைக்கும் போது சில விதைகள் வழியோரம் விழுந்துவிட்டன: 
வழியோரம் விதைப்பது அவர் நோக்கமல்ல. அவர் விதைக்க நினைத்த இடத்தில் இவை விழாததால் அல்லது விரும்பாததால், அவை ஏற்பில்லாத இடத்தில் விழுந்துவிட்டன. இதனால்தான் பறவைகளுக்கு இரையாகிவிட்டன. நம் வாழ்வும் ஆண்டவருக்கு ஏற்புடைய இடத்தில் விழாவிட்டால், பறவைகளைப் போல ஆபத்துகள் நம்மை இரையாக்கும் என்பதில் மிகவும் கவனமாக இருக்கவேண்டும். 

இ. மண்ணில்லாப் பாறைப் பகுதியில் சில விதைகள் விழுகின்றன: 
மண் நிலத்தின் நல்ல அடையாளம். மண்ணின் தன்மைதான் அதனை சுற்றியிருக்கின்ற இயற்கையை தீர்மாணிக்கின்றது. பாறைகளுக்கு வலிமை அதிகம், ஆனால் மண்ணுக்குத்தான் மவுசு அதிகம். மண் உள்ள நிலத்தைதான் மனிதர்களும் விலங்குகளும் அதிகமான தேடுகிறார்கள். பாறையில் விதைகள் விரைவாக முளைக்கும் அதே வேகத்தில் அவை இறந்தும் போகும். வேகம் அல்ல நிதானம்தான் ஒருவரின் வாழ்வை தீர்மாணிக்கிறது. இந்த உலகம் வேகத்தைதான் விழுமியமாக காட்டப்பார்க்கிறது. விரைவு உணவு, விரைவுக் கல்வி, விரைவுச் சாலை, விரைவுத் திருமணம் என்று சொல்லி, இறுதியாக மரணத்தையும் விரைவாக வரவழைக்கிறது. வேகத்தில் என்ன கலாச்சாரம் இருக்கிறது, வேகத்தில் மனிதர் வளர முடியுமா? குழைந்தை பிறக்க பத்துமாதங்கள் தேவை, அதனால் அது நிறைமாத குழந்தையாக பிறக்கும், இல்லாவிட்டால் பிறந்த உடனே அதனை கண்ணாடி பெட்டியினுள் வைத்து, அதன் உயிரைக் காக்க போராட வேண்டிவரும். மெதுவாகச் செல்வோம், மகிழ்வாகச் செல்வோம். 

ஈ. முட்செடிக்குள் விழுந்த விதைகள், வளர்ந்தன ஆனால் நெரிக்கப்பட்டன: 
முட்செடிகளும் பயிர்களும் வளரும் போது ஒரேமாதிரியாத்தான் தோன்றுகின்றன. ஆனால் இரண்டின் சுபாவங்களும் வௌ;வேறு. இயல்பு மற்றும் சுபாவம் ஒருவரின் வளர்ச்சியை தீர்மாணிக்கும். முட்செடிகள் கவர்ச்சியாக இருக்கின்ற என்பதற்காக அதனை தூக்கி முத்தமிட முடியுமா. முள்ளு குத்தும், இரத்தம் வரும். முட்கள் ஆபத்தானவை இந்த இடத்தில். சுற்றியிருக்கிறார்கள் என்பதற்காக அவர்கள் நண்பர்கள் உறிவனர்கள் ஆக முடியுமா. உணவினர்களும் நண்பர்களும் நல்லவர்களாக இல்லாவிடில், அவர்களின் இயல்பும் தன்மையும் நம்மையும் மாற்றிவிடும், ஏன் அழித்தேவிடும். நல்ல நண்பர்களும் நல்ல உறவுகளும்தான் தேவை. ஒன்றில் அவர்களை திருத்த வேண்டும் அல்லது இடத்தை மாற்றவேண்டும். கவர்ச்சி அல்ல, அழகுதான் சிறந்தது.

உ. நல்ல நிலத்தில் விழுந்தால் நல்ல பலன் நிச்சயமாக கிடைக்கும்: 
நூறு மடங்கோ, முப்பது மடங்கோ அல்லது அறுபது மடங்கோ ஆண்டவருக்கு முன்னால் எல்லாம் ஒன்றுதான். அப்பாவுக்கு பிள்ளைகள் எல்லாம் ஒன்றுதானே. இவை வெறும் எண்ணிக்கைகள் தான். நூறு மடங்கு பலன்கொடுக்க வேண்டியது நூறு மடங்கு கொடுக்காவிட்டால்தான் சிக்கல், முப்பது மடங்கு கொடுக்க வேண்டியது முப்பது மடங்கும், அறுபது, அறுபது மடங்கும் கொடுக்க வேண்டும். அவரவரால் எதனைக் கொடுக்க முடியுமோ அதனை அவரவர் கொடுக்க வேண்டும். மற்றவரோடு ஒப்பிடாமல், தன்னால் முடியுமானதை ஒருவர் செய்தாலே உலகம் சீராகும். 

ஊ. கேட்கும் செவிகள் வேண்டும்: 
செவிகள் இருந்தால் போதுமா? கேட்காத செவிகளால் என்ன பயன். கிறிஸ்தவர்களாக பிறந்தால் போதுமா, கிறிஸ்தவத்தை வாழத கிறிஸ்தவர்களும் நம்பிக்கைற்றவர்கள்தானே? என்னிடம் என்னவெல்லாம் இருக்கிறது என்பது முக்கியமல்ல மாறாக அவற்றைக் கொண்டு என்ன நன்மைத்தனம் செய்கிறேன் என்பதுதான் முக்கியமும், தேவையுமாகும். 

கேட்கும் செவிகளைக் கேட்போம் ஆண்டவரிடம். 

வெள்ளி, 3 ஜூலை, 2020


ஆண்டின் பொதுக்காலம் 14ம் ஞாயிறு. 
05.07.2020

ஆண்டவர் இன்னொரு வாரத்தை நமக்கு கொடுத்து, ஆசீர்வாதங்களால் நிறைகின்றார். இன்றைய வாசகங்கள் நமக்கு கடவுள் அருளும் நம்பிக்கையை அறிக்கையிடுகின்றன. இன்றைய வாசகங்களாக
முதல் வாசகம்: செக்கரியா 9,9-10
பதிலுரைப்பாடல்: திருப்பாடல் 145
இரண்டாம் வாசகம்: உரோமையர் 8,9-13
நற்செய்தி: மத்தேயு 11,25-30 புத்தக பகுதிகளிடமிருந்து எடுக்கப்பட்டுள்ளன.
இன்றைய முதல் வாசகத்தின் கருப்பொருளாக வருங்கால அரசரின் பண்புகள் பட்டியலிடப்பட்டுள்ளன: இவர் வருகைக்காக எருசலேம் மகிழச் சொல்லி கேட்கப்படுகிறது. அடிமட்ட அரசியல் பணியாளர்கூட, தன்னை தானைத் தளபதியாக நினைக்கும் இக்கால கனவு உலகில், இந்த பிரபஞ்சத்தின் தலைவர் மிக எளிமையாக காட்டப்படுகிறார். அவர் நீதியுள்ளவர் இருந்தாலும் அவர் வெற்றிவேந்தர். எளிமையின் அடையாளமாக கழுதைக் குட்டியின் மேல் ஏறி வருகிறார். கழுதையை அவமானத்தின் அடையாளமாக பார்க்கும் வீரச் சிந்தனையை நக்கலடிக்கிறார். தேர்ப்படைகள், குதிரைப்படைகள் பலத்தின் அடையாளமாக நாம் சிந்தித்தால், இவர் அவற்றை பயத்தின் அடையாளங்களாக பார்க்கிறார். வேற்றினத்தாருக்கு அச்சத்தை அர்ச்சனையாக்கும் ஆசைபிடித்த அரசியலில், அவர்களுக்கு அமைதியை ஆசீராக்க கேட்கிறார். கடவுள் ஒரு அழகான உலகத்தை படைக்க, மனிதர்கள் எல்லாரும் சேர்ந்து கண்டங்களையும் நாடுகளையும் படைத்தார்கள். இதனால் கடவுள் படைத்த உறவினர்கள் அந்னியர்களாகிப்போனார்கள். இந்த பிரிவினையில் இருந்து உலகை மீட்கவே, இவர் தன் ஆட்சியை மீண்டும் உலகின் அனைத்து எல்லைகளிலும் நிறுவுகிறார் போல.
சாராயக்கடையில் கிடைக்கும் 500 ரூபாய் பியர் போத்தல்கள், 'உனக்குள் உள்ள சிங்கத்தை தட்டி எழுப்பு' என்று உசுப்பேத்தும் இந்த சமூதாயத்தில், பவுல் உனக்குள் உள்ள தூய ஆவியானவரை மறவாதே என்ற உண்மையை  சொல்கிறார். ஊனியல்பு ஒன்றும் சாதாரண இயல்பல்ல, அது கவர்ச்சியானது, அதிகமான ரசிகர்கள் வட்டத்தை கொண்டுள்ளது, இதற்குத்தான் மவுசு அதிகம் போல. பலருக்கு தூய ஆவிக்குள் வாழ்வு, இறந்த கால சிந்தனைபோல தெரிகிறது. மரணத்தை பார்த்து பயப்படும் இந்த உலகம், ஏன் மரணத்தை நோக்கித்தான் தன்னுடைய ஒவ்வொரு அடியையும் எடுத்துவைக்கிறது என்பது ஆச்சரியமாக இருக்கிறது. வாழ்வை கொடுத்து உயிர்ப்பையும் கொடுக்கும் ஆண்டவர் ஏனோ அதற்கு தெரியவில்லை, அவர் அதிகமாக விரும்பப்படுகிறாரும் இல்லை. கடவுளை 'அப்பா தந்தையே' என அழைப்பவர்களை, தூய ஆவியின் மக்கள் என்கிறார் பவுல், ஆனால் இதனை உணராமல் வாயில் மட்டுமே கடவுளை அப்பா தந்தையே என அழைக்கிறவர்களை அவர் சொல்லவில்லை.

மத்தேயுவின் இன்றைய நற்செய்தியில் அழகான சில கருத்தியல்களைக் காணலாம்: 

அ. கடவுள்தான் தந்தை, அத்தோடு அவர்தான் விண்ணுக்கும் மண்ணுக்கும் ஆண்டவர் - 
தந்தையருக்கு வரைவிலக்கணம் கடவுள் என எடுக்கலாம். தந்தைகள் உருவாக்கிறவர்கள், பாதுகாக்கிறவர்கள். ஆனால் இந்த உலக்கின் சிந்தாந்தங்கள், தந்தையர்களை கவர்ச்சியானவர்களாக, சினிமா பாணியிலான கதாநாயகர்களாக, பயமுறுத்துகிறவர்களாக, பணம் சுரக்கும் இயந்திரங்களாக, உணர்வற்றவர்களாக, காட்ட முயல்கிறது. கடவுள் ஒரு அழகான தந்தை அனுபவம். கடவுளை பரலோகத்திற்கு மட்டும் உரியவர் எனக் கருதி, பூலோகத்தில் எப்படியான வாழ்க்கை முறையையும் வாழலாம் என நினைத்தால், அது மகிவும் ஆபத்தாக முடியும். அது வெறும் மூட நம்பிக்கைதான். மண்ணக வாழ்வு விண்ணகத்தை நோக்கியிருக்க வேண்டும், விண்ணக வாழ்வு, மண்ணகத்தில் தொடங்க வேண்டும், எனெனில் கடவுள்தான் இரண்டுக்கும் தந்தையாக இருக்கிறார்.

ஆ. ஞானிகளுக்கும் அறிஞர்களுக்கும் வாய்ப்பில்லை - 
ஞானிகள்-அறிஞர்கள் என்று தங்களை அறிமுகப்படுத்துகிறவர்கள் உண்மையில், அப்படியாக இருக்க முடியாது. தன்னை அறிபவரே ஞானி என்கிறார் சோக்கிரடீஸ், தன்னை அறிகிறவர், ஒரு நாளும் தன்னை அறிஞராகவே அல்லது ஞானியாகவோ முன்னிறுத்த மாட்டார். ஏனெனில் ஞானமும் அறிவும் கடவுளின் கொடை, அதனை பெற்றவர் எப்போதும் தாழ்ச்சியுள்ளவராக இருப்பார். இந்த உலகில் ஞானிகளும் அறிஞர்களும் பெருகிவிட்டார்கள் போல, அதானல் மூட நம்பிக்கையும், வன்முறைக் கலாச்சாரமும் ஆட்சி செலுத்துகிறது.
இயேசு குழுந்தைகளை ஞானிகளும் அறிஞர்களும் என்கிறார். ஏனெனில் இவர்களுக்குத்தான் இந்த உலகின் நிலையாமை தெரிந்திருக்கிறது. அவர்கள்தான் நிகழ்காலத்தில் வாழ்கிறவர்கள். அவர்களால்தான் உண்மையை உள்ளபடியே சொல்ல முடிகிறது. கடவுள் வெளிபப்டுத்துகிறார், கடவுள் என்னோடு மட்டும்தான் பேசுகிறார், அவர் என் கனவில் உன்னைப் பற்றிச் சொன்னால், உன்வீட்டில் பில்லி சுனியம் இருக்கிறது, யாரோ கட்டிவைத்திருக்கிறார்கள், யாரோ செய்வினை செய்துள்ளார்கள் என்று சொல்லும் 'ஞானிகளுக்கும் அறிவாளிகளுக்கும்' பின்னால் செல்லும் இந்த உலகம் 'சரி சரி எல்லாம் சரியாயிடும், அழாதீங்க, அப்பாட்ட சொல்லி வாங்கித்தாரேன், கடவுள் பாத்திப்பார்' என்று சொல்லும் குழந்தை ஞானத்தையும், அறிவையும் துய்த்துரண முடியவில்லை. இவ்வுலக ஞானிகளும் அறிவாளிகளும் தொடர்ந்து ஏமாற்றிக்கொண்டே இருப்பார்கள், இந்த உலகம் அவர்களை ஞானிகள் அறிவாளிகள் என்று ஏற்கும் வரை. பிழைகள் அவர்களுடயவை மட்டும் அல்ல. சூனியங்களை கண்டுபிடிக்கும் அறிவாளிகளால், ஏன் அவற்றை அழிக்க முடியவில்லை என்பது மட்டும் தெரியவில்லை, பேய்களை ஓட்டுவதாக சொல்லும் அறிவாளிகள் ஏன் பேய்களைவிட பயங்கரமாக வாழகிறார்கள் என்பது மட்டும் ஏனக்கு புரியவில்லை.

இ. மகனின்றி வெளிப்பாடில்லை - 
இயேசுவை சிலையிலும், புத்தகத்திலும், படங்களிலும் பார்க்க மனம் விரும்புகிறது, ஆனால் அவரை ஏனோ வாழ்வில் வாழ தயங்குகிறது. இயேசு ஆயுதம் ஏந்தாத, பழிவாங்காத, அழிக்காத, பயமுறுத்தாத, வர்க்க பிரிவினை சொல்லாத, பிரதேசவாதம் காட்டாத, மொழிவாதம் போதிக்காத, பாலினம் பாராட்டாத கடவுள். அவர் இதிகாசங்களையோ, புராணங்களையோ, கதைகளையோ, கவிதைகளையோ எழுதிவிட்டுபோகவில்லை. அவர் எழுதியது ஒருமுறை நிலத்தில் மட்டும்தான், அதுவும் ஒரு பெண்ணைக் காக்கவே. அவர் எந்த பல்கலையிலும் கற்கவில்லை, பல்மொழிகளும் பேசவில்லை, நூறாண்டுகள் வாழவுமில்லை. இருந்தாலும் அவர் ஒருவர்தான் கடவுளின் உண்மையான வெளிப்பாடு. அவர் சொல்லும் வெளிப்பாடு மகிவும் தெளிவாக இருப்பதால்- வெளிப்பாடுகள் தெளிவாக இருக்கக்கூடாது என்பதற்காகவே, பலர் அவரையும் தெளிவில்லாமல் ஆக்குகின்றார்கள்.

ஈ. பெருஞ்சுமை சுமந்து சேர்ந்திருப்பவர்கள் -
சுமைவந்தாலே சோர்வு வரும், அதுவும் பெருஞ்சுமை வந்தால் பேர் சேர்வு வரும். ஆனால், சுமைகள் சோர்வைக் கொண்டு வராது என்று ஆண்டவர் சொல்வது ஆச்சரியமாகவும் சந்தோசமாகவும் இருக்கிறது. ஆம் சேயைக் காணும் தாயின் முகம் பிரசவ வலியை மறந்துவிடுகிறது, மகளின் சிரிப்பைக் காணும் தந்தையின் தோள்கள், கடன்சுமையை கண்டும் வீரம் கொள்கிறது. சுமைகள் சோர்வைத்தான் கொடுக்கும் என்பது எல்லாருக்கும் பொருந்தாது. அத்தோடு அது இயேசுவின் சீடர்களுக்கு நிச்சயமாக பொருந்தாது.

உ. அழுத்தாத நுகம் - 
நுகம் என்றாலே அடிமைத்தனம் என நினைக்கிறோம். நுகத்தின் அடையாளம் ஆழத்துதல் என என்னலாம். உண்மையிலே விலங்குகளுக்கு பாரம் அழுத்தக்கூடாது என்பதற்காகவே, நுகம் கண்டுபிடிக்கப்பட்டது என்பது ஆச்சரியமான சத்தியம். சிலுவையை சிலர், துன்பத்தின் அடையாளமாக, தண்டனையின் வடிவாக பார்க்கிறார், அவர்கள் நினைக்கிறார்கள் என்பதற்காக அது உண்மையாகது. சிலுவை மீட்பின் அடையாளம், நுகம் பாரத்தை குறைக்கும் அறிவின் அடையாளம். இயேசுவின் நுகம், இனிமையான பாரம்.

30.06.2024 துன்பங்களுக்கு காரணம் கடவுள் என்ற மனநிலை சரியான மனநிலை அல்ல.

30.06.2024 துன்பங்களுக்கு காரணம் கடவுள் என்ற மனநிலை சரியான மனநிலை அல்ல . காலம் காலமாக வாழ்வியல் பிரச்சனைகளுக்கு , மனிதர்கள் ,...