புதன் 19.11.2025
ஏன் என் பணத்தை வைட்டிக் கடையில் கொடுத்து
வைக்கவில்லை? லுக்கா 19:23
இன்றைய நற்செய்தியிலிருந்து பெற்றுக்கொள்ளக்கூடிய படிப்பினைகள் சில:
அ. நம்முடைய எண்ணங்கள் அவர் எண்ணங்களாக இருக்க வேண்டியதில்லை. இறையாட்சி எப்பொழுதோ தோன்றியிவிட்டதே! ஆண்டவர் எப்போது உலகிற்கு வந்தாரோ அப்போதே இறையாட்சி தோன்றிவிட்டது, ஆனால் அது முழுமையடையவில்லை, அதற்கு நாம்தான் காரணம் ஆண்டவரல்ல. இப்போது இறையாட்சியின் கடமை நம் கரங்களில், ஏன் அவர் கரங்களை மீண்டும் மீண்டும் உற்று நோக்க வேண்டும்?
ஆ. யார் இந்த உயர் குடிமகன்?
மூல பாடம் இவரை (τις
εὐγενὴς டிஸ் எவுகெனேஸ்) உயர் குல மகன் என்று சொல்கிறது, இது ஒரு பணியோடு சம்மந்தப்பட்டது, பிறப்போடு அல்ல. அவர் போவது அதிகாரம் பெறவும், திரும்பிவரவும். அவர் பத்து அடிமைகளைத்தான் அழைக்கிறார் (δούλους துலோஸ்), இவர்களை பணியாளர்கள் எனவும் அழைக்கலாம். இவர்களுக்கு பத்து மினாக்கள் கொடுக்கப்படுகிறது. இந்த மீனாக்கள் (μνᾶ மினா), ஒன்று சுமார் 575 கிராம் பெறக்கூடிய ஒரு அக்கால நாணயம். புழைய ஏற்பாட்டு மீனாவிற்கும், புதிய ஏற்பாட்டு மீனாவிற்கும் வித்தாசங்கள் பல உள்ளன. புதிய ஏற்பாட்டு மீனா, மிகவும் பெறுமதிவாய்ந்தது. ஒரு மீனா, நூறு திராக்மாக்களுக்கு சமன், ஒரு திராக்மா ஒரு நாள் கூலி, ஆக ஒரு மீனா, நூறு நாட்களுக்கான கூலி. ஒரு நாள் கூலி மூவாயிரம் ரூபாய்கள் என்றால், ஒரு மீனா மூன்று இலட்சம் ரூபாய்கள் ஆகும். ஆகவே கொடுக்கப்பட்டது ஒரு பெரிய தொகை. எதிர்பார்க்கப்பட்டது வானிபம். கொஞ்ச காசு இல்லை.
இ. குடிமக்கள் அவரை வெறுத்தார்கள், தலைமை ஆட்சியாளர்கள் அவரை ஆதரித்தார்கள். அவர் அதிகாரத்தோடு திரும்பிவருகிறார். இப்போதும் இதுதான் நடைபெறுகிறது. கள நிலவரம் அதிகமாக புரிந்துகொள்ளப்படுவதில்லை.
ஈ. கணக்கு கேட்கப்படுகிறது, சன்மானம் வழங்கப்படுகிறது. முதலாமவர், ஒரு மினாவைக் கொண்டு பத்து மேலும் ஈட்ட, அவர் பத்து நகர்களுக்கு அதிகாரியாகிறார். இரண்டாமவர் ஒரு மினாவைக் கொண்டு ஐந்து ஈட்ட அவர் ஐந்து நகர்களுக்கு அதிகாரியாகிறார். இந்த இரண்டு பேரும், அடிமைகள், பணியாளர்கள் நிலையிலிருந்து, அதிகாரிகள் நிலைக்கு மாற்றப்டுகிறார்கள், அதற்கு அவர்களுடைய விவேகமும், உற்சாகமும் காரணமாக அமைகிறது.
உ. மூண்றாவதாக ஒருவர், அவர் தலைவருடைய மினாவை பயன்படுத்தவில்லை, திருடவும் இல்லை. ஒழித்து வைத்தவர். தன் கடமையை செய்யாமல், தலைவரை வார்த்தைகளால் கட்டப்பார்க்கிறார், அதே வார்த்தைகள் அவருக்கு தீர்ப்பாக அமைகிறது. அவருடைய அந்த பயன்படாத மினாவும், முதலாமவருக்கு கொடுக்கப்படுகிறது. இப்போது பத்து மினாவுள்ளவர்க்கு பதினொன்றாகிறது. இந்த அடிமை பணியாளர், தன் சுதந்திரத்தை இழந்து, அடிகைளிலே இன்னொரு படி கீழே சென்று, சிறைக்கு செல்கிறார். சோம்பல் வீட்டைக் கெடுக்கும்.
ஊ. இது என்ன நியாயம்? உள்ளவருக்கு மேலும் கொடுக்கப்படுகிறது, இல்லாதவரிடமிருந்து உள்ளதும் எடுக்கப்படுகிறது. இது இறைநீதியா? அநியாயம் போல தோன்றுகிறதே? நிச்சயமாக இல்லை. இந்த ஆட்சியாளர் கடவுள் அல்ல, அவர் இயேசுவின் அடையாளமும் அல்ல. அவருக்கு கொடுக்கப்படும் எந்ந அடையாளமும் இயேசுவோடு ஒத்துப்போகவில்லை. இயேசு உயர் குடியில் பிறக்கவில்லை, ஏனெனில் விவிலியத்தில் உயர் குடி என்ற பதம், இறையியல் பதம் அல்ல. தாவீது தெரிவாலே அரசனானார், உயர் குடி என்ற வழக்கில் இல்லை. குடிகளில் உயர் குடி தாழ் குடி என்றில்லை. இவைகள் மனிதர் ஏற்படுத்திய பிழையான சமூக அமைப்புக்கள். இயேசுவை சாதாரண மக்கள் வெறுக்கவில்லை, இயேசுவிடம் அடிமைகளோ, பணியாளர்களோ இல்லை. இயேசு ஏற்கனவே தந்தையிடம் அதிகாரத்தை பெற்றவர். இயேசு கண்டிப்பானவரா, விதைக்காத இடத்தில் அறுப்பவரா, வைக்காததை எடுக்கிறவரா. இது இயேசுவிற்கல்ல, அக்கால-இக்கால சமூக வழக்கைத்தான் குறிக்கிறது. விரும்பியோ விரும்பாமலே நாம் அதற்குள் ஒரு அங்கமாக மாறிவிட்டோம்.
இங்கே சொல்லப்படும், நிகழ்வு வாழ்வைப் பற்றியது. வாழ்வில் அனைவருக்கும் சந்தர்ப்பம் வழங்கப்படுகிறது. அதனை ஒருவர் எப்படி பயன்படுத்துகிறார் என்பதைப் பொருத்தே அவர் எதிர்காலம் அமையவிருக்கிறது. சோம்பேறி தன்னிடம் உள்ளதை இழக்கிறான், விசுவாசி மேலும் பெறுகிறார்.
எ. இறுதிக்காட்சி: மேலும் இந்த அரச தலைவர் தன் பகைவருக்கு தண்டனையும் கொடுக்கிறார். ஆக வாழ்வு தன் கடமையைச் செய்யும் போல. இறுதியாக இயேசு எருசலேம் செல்கிறார். இங்கே எருசலேம், பணியின், தியாகத்தின் அடையாளம் என்பதை நாம் உற்று நோக்க வேண்டும்.
முடிவாக: வாழ்வு ஒரு சந்தர்ப்பம், அதனை பயன்படுத்துகிறவரே புத்திசாலி. இயேசுவும் ஒரு சந்தர்ப்பம், அவரை வெறுமனே தொட்டுக் கொஞ்சிவிட்டு வெற்றுக்கையோடு போகவும் முடியும், அவரை பயன்படுத்தி இன்னும் பத்து வாழ்வை பெற்றுக்கொள்ளவும் முடியும். முடிவு நம் கையில்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக