வெள்ளி, 28 ஜூலை, 2017

களைகள்: Weeds

 களைகள்
சனி, 29 ஜூலை, 2017

களைகள் என்றால் என்ன? இது சிறிய வயதில் விஞ்ஞான பாடத்திற்காக கேட்கப்பட்ட கேள்வி. களைகளைப் பற்றி பல வரைவிலக்கணங்கள் இருக்கின்றன. 'விவசாயி ஒருவரால் தன் நிலத்தில், தன்னால் விதைக்கப்படாதது, விதைக்கப்பட்டால் அது களை எனப்படும்', என்பது எங்களுக்கு சொல்லித்தரப்பட்டது. தக்காளி விதைக்கப்பட்ட நாற்றுமேடையில் மிளகாய்ச் செடி வளர்ந்தால் அதுவும் களையே
இன்று தூய மார்த்தாவுடைய திருநாள். ஆண்டவர் இயேசு ஆண்களுக்கும் பெண்களுக்கும் வித்தியாசம் காட்டாமல், பெண் சுதந்திரத்தை, ஒரு ஆணாக இரண்டு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கொடுத்து அழகுபார்த்தவர். இன்று இரண்டு ஆயிரங்கள் ஆண்டுகள் கடந்தும், வேலையில்லாத சில ஆணாதிக்க வெட்டிகள், பெண்கள் செய்வது சரியா பிழையா என்பதை பார்ப்பதே வேலையாகக் கொண்டு திரிகிறார்கள். மார்த்தா, மரியா மற்றும் லாசருடைய சகோதரி. இவர்கள் பெத்தானியாவை சேர்ந்தவர்கள். இயேசு ஆண்டவரின் பல தேவகளை சகோதரியின் நிலையிலிருந்து கவனித்தவர் மார்த்தா. ஓடி ஓடி வேலைசெய்து சிலவேளைகளில் ஆண்டவரிடம் அன்புப் பேச்சுக்களையும் வாங்கியவர். இயேசு இந்த சகோதரியை மிகவும் நேசித்தார், இதனால்தான் தன்னருகில் இருந்து தான் பேசுவதை கேட்கச் சொன்னார். தன் சகோதரன் லாசர் இறந்தபோது, இவர் அழுத அழுகையைப் பார்த்து ஆண்டவரையே கண்கலங்க வைத்தவர். 'நீர்தான் வரவிருக்கும் மெசியா என்பதை நான் நம்புகிறேன்' (யோவான் 11,25-27) அன்று மார்த்தா சொன்னது இன்று நம்முடைய விசுவாசமாகியிருக்கிறது. வாழ்க மார்த்தா, வாழ்க பெண்ணியம்
மார்த்தாவிற்கும் பயிருக்கும், களைகளுக்கும் என்ன தொடர்பு என்று சிந்திக்க விளைகிறேன். இந்த உலகம், பயிர்களைவிட களைகள் மேல் மோகம் கொள்ளத் தொடங்கிவிட்டதோ? என எண்ணத் தோன்றுகிறது. கடவுள் விதைக்கிறதைவிட தீயவர்கள் விதைக்கிறது நன்றாக வளர்வன போல தோன்றுகின்றன. ஒழுக்கமாக உடுத்துகிறவர்கள், உற்சாகமாக படிக்கிறவர்கள், நீதியாக வாணிகம் செய்கிறர்கள், நேர்மையாக நிறுவணங்கள் நடத்துகிறவர்கள், விசுவாசமாக உறவு செய்கிறவர்கள், உண்மையாக காதலிக்கிறவர்கள், அமைதியாக தியாகம் செய்கிறவர்கள், நீதிமான்களின் வாழ்க்கை நடத்துகிறவர்கள், முட்டாள்களாகவும், விவேகமற்றவர்களாகவும், அறிவிலிகளாகவும், கோமாளிகளாகவும் பார்கப்படுகிறார்கள் போல, சில சமயத்தில் தோன்றுகிறது
புத்திசாலித்தனமாக ஏமாற்றுகிறவர்கள், கவர்ச்சியாக உடுத்தி அசுத்தமாக வாழ்கிறவர்கள், பொய் சொல்லி மதம் செய்கிறவர்கள், ஆண்டவரை தெரியாத குணப்படுத்துகிறவர்கள், தந்திரமாக ஏமாற்றி வாணிகம் செய்கிறவர்கள், அருள் இல்லாமல் உளவியல் செய்கிறவர்கள், பேச்சிலும் நடையிலும் வன்முறை செய்கிறவர்கள், கதாநாயகர்களாக மாறிக்கொண்டிருக்கிறார்கள் போலவும் தெரிகிறது. நம் பிள்ளைகளுக்கு இவர்கள் அடையாளமாக மாறிவிடுவார்களோ என்ற அச்சமும் வருகிறது
மார்த்தா களையல்ல, அவர் பயிர், அந்த பயிர் முப்பது, அறுபது, நூறு மடங்காக பயன்கொடுத்தது. அதனால்தான் இன்று அவருடைய திருவிழா. களைகள் கவர்ச்சியாக இருக்கலாம், இன்பம் தரலாம், உசுப்பேத்தலாம், வெறியூட்டலாம், ஆனால் அவைகள் களைகள்தான் என்பதை மறவாமல் இருப்போம். அவை தீயவரால் விதைக்கப்பட்டவை என்பதையும் அறிந்திருப்போம். களைகள் விதைக்கப்படாதவை, விரும்பப்படாதவை, ஆபத்தானவையும் கூட. பொறுத்திருந்து அறுவடை நாளில் உகந்த முறையில் வெளியேற்றிவிடுவோம். பயிர் வளர்ப்போம், பயிராகுவோம்
நலம் உண்டாகட்டும்!!! 

மி. ஜெகன்குமார் அமதி
வசந்தகம்

அவரோடிருக்க! to be with Him

அவரோடிருக்க!
வெள்ளி, 28 ஜூலை, 2017

இன்றைய நாளில் ஆறு குருக்கள் தங்களுடைய குருத்துவத்தின் வெள்ளி விழாவை தூய அந்தோனியார் ஆலயம், மானிப்பாய், யாழ்ப்பாணத்திலே கொண்டாடி தங்கள் சந்தோசத்தை வெளிப்படுத்தினார்கள். அவர்களில் ஒருவர் அமதிகளின் வடமாநில முதல்வர். இன்னொருவர் பிரான்சிஸ்கு சவேரியார் குருத்துவ கல்லூரியின் வந்து போகும் பேரராசிரியர். இவர் எனக்கு இறையியலில் விவிலியம் கற்றுக்கொடுத்தவர். இன்னொருவர் எங்களுடைய சிறிய குருமடத்தின் முன்னாள் அதிபர். இவர்களுள் நான்குபேர் அமதிகள் இரண்டுபேர் யாழ்மறைமாவட்ட குருக்கள். அதற்கென்ன, அனைவரும் ஆண்டவரின் குருக்களே!
இருபத்தைந்து வருடங்களாக இவர்கள் குருத்துவம் என்ற பாதையிலே நடந்து வந்தவர்கள். இன்று ஆண்டவருக்கு நன்றி செலுத்தியபோது, இவர்களோடு சேர்ந்து இவர்களின் நண்பர்கள், உறவினர்கள் மற்றும் நலன் விரும்பிகள் என்று பலரும் நன்றி செலுத்தினார்கள். மறையுரையை மன்னார் மறைமாவட்டதின் குரு முதல்வர் அருட் தந்தை விக்டர் சோசை வழங்கிய போது, குருத்துவம் என்பது 'அழைக்கப்பட்டவர் இன்னொரு இயேசுவாக மாற அழைக்கப்படும் அழைப்பு' alter christus என அழகாகச் சொன்னார். சில நாட்களுக்கு முன்னர் அவரும் தன்னுடைய குருத்துவ வெள்ளி விழாவை கொண்டாடியவர்தான்
இந்த விழா நாயகர்களை வாழத்தச் சென்றபோது, என்னுடைய முன்னாள் போராசியர் என்னைக் கண்டவுடன் சந்தோசத்தில் தன்னுடைய விழாவின் முக்கியத்துவத்தையே மறந்தவராக, ' வந்திட்டீர், பின்னேரம் பாவசங்கீத்தனம் இருக்கு ஐஞ்சரைக்கு வரனும், சாப்பாடு என்னோடு என்று சொல்லிட்டு' போக்கொண்டே இருந்தார். எனக்கு சிரிப்பு வந்தது இருந்தும் யோசித்தேன். இந்த குருக்களின் இரகசியம் என்ன? எப்படி இந்த இருபத்தைந்து ஆண்டுகளை கடந்து வந்தனர்? இவர்களை இயக்கும் சக்தி என்ன? நன்றியுரையிலே பலர் இவர்களின் அருமை பெருமைகளை புகழந்தவன்னம் இருந்தனர், இருப்பினும் இவர்களின் எவரும் மதிமயங்கியவர்கள் போல தென்படவில்லை. அவர்களும் ஏதோ மற்றவரின் விழாவிற்கு வந்தவர்க்ள போலவே தோன்றினார்கள். ஒவ்வொருவரும் தங்களுடைய நாளாந்த அலுவல்களை கவனிப்பதிலேயே கவனம் செலுத்தினார்கள்
இந்த வேளையில் இவர்களை மௌமான அவதானித்தேன். நண்பர்களோடு கதைத்து சிரித்தாலும் மனதினுள் இவர்களின் குருத்துவத்தின் அழகை இரசித்தேன். இவர்கள் கடந்த காலத்தின் கோர யுத்தத்திலும், அவலங்கள் நிறைந்த இடப்பெயர்வுகளிலும் மக்களுக்காக உழைத்தவர்கள். மக்களோடு தங்களை அடையாளப்படுத்தியவர்கள். இவர்களுக்கு அடையாளம் கொடுத்தது இவர்களின் ஆளுமைகள் அல்ல, எனெனில் இவர்களைவிட ஆளுமையில் சிறந்தவர்கள் இவர்களின் நண்பர்களாக உறவினர்களாக இருக்கின்றனர். இவர்களின் கல்வித் தகமைகள் அல்ல, இவர்களைவிட இவர்களின் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் சிறந்த கல்விமான்களாக இருக்க்கின்றனர். அப்படியானால் இவர்களின் தகுதி என்ன? அப்படியென்ன இவர்கள் சாதித்தனர்

இன்று பிரசங்கி சொன்னது நினைவிற்கு வருகிறது. இவர்கள் ஆண்டவரோடு இருந்தார்கள், பலத்திலும் பலவீனத்திலும் இயேசுவை பற்றினார்கள். மெது மெதுவாக அறிந்தும் அறியாமலும் மறு இயேசுக்களாக மாறிவிட்டார்கள். இதனால் அவரோடு இருந்து பின் அவரின் பிரசன்னத்தை அனுபவித்து வழங்குகிறார்கள்

தொடரட்டும் உங்கள் பயணம், உங்கள் உறவு
ஆண்டவர் உங்கள் ஆசீர்வதிக்கிறார்
நீங்களும் ஆசீர்வதித்து, ஆசீர்வாதங்களாக மாறுங்கள்

மி. ஜெகன்குமார் அமதி

வசந்தகம்.

30.06.2024 துன்பங்களுக்கு காரணம் கடவுள் என்ற மனநிலை சரியான மனநிலை அல்ல.

30.06.2024 துன்பங்களுக்கு காரணம் கடவுள் என்ற மனநிலை சரியான மனநிலை அல்ல . காலம் காலமாக வாழ்வியல் பிரச்சனைகளுக்கு , மனிதர்கள் ,...